தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்
The Forecast 2 years ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோல தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து. வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சிறப்பு குழுவை தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்த குழுவில் மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் கே.பொன்னுசாமி,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் இ.ஆ.ப , கூடுதல் ஆணையர் பிரகாஷ் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இ.ஆ.ப , மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் இ.ஆ.ப , உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக விரிவாக விளக்கினார்.
மத்திய குழுவினர் தங்கள் ஆய்வு குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments