மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டர் ஜன.2-க்கு இறுதி செய்யப்படும்: மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் தகவல்
The Forecast 2 years ago மதுரை
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் ஜன. 2-ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்தார். மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்ட அவர், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் எஸ்.பி.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத தொற்று நோய் தடுப்புப் பிரிவு தொடங்கப்படும். இந்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவுக்காக வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட வேண்டியுள்ளதால், கட்டுமான மதிப்பீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முழு திட்டத்துக்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு, திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜன. 2-ம் தேதி டெண்டர் இறுதி செய்யப்படும். இது தமிழக மக்களுக்கு, மத்திய அரசு அளிக்கும் புத்தாண்டுப் பரிசாக இருக்கும்.
உலக அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதால், பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய நிறுவனங்களும் டெண்டர் கோரலாம். எய்ம்ஸ் டெண்டரில் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மை இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராக திமுக-வினர் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். மதுரை எய்ம்ஸ்-க்கு நான் தான் முழு பொறுப்பு. இந்த திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments