வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஏற்காடு அடிவாரத்தில் கார்கள் பங்கேற்ற பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்
The Forecast 1 month ago சேலம்
மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு குறித்து சேலம், ஏற்காடு அடிவாரத்தில் 150 க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்ற பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., நேற்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர்,இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்கள். பேரணியினை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்களித்து வருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ம் தேதியன்று அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய முழு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத்தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியில் 78.97 சதவீத வாக்குகளும், சேலம் மாவட்டம் முழுவதும் 77.97 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இன்றையதினம் சேலம், ஏற்காடு அடிவாரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 150 க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்ற பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பேனர்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தெரிவித்தார்.
இவ்வாகனப் பேரணியானது, ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி, ஐந்து ரோடு, நான்கு ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குகை வழியாக சீலநாயக்கன்பட்டி சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் மயில், செயற்பொறியாளர் சேலம் மாநகராட்சி பழனிசாமி, சேலம் வட்டாட்சியர் தாமோதரன், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ஆர் ரவிச்சந்திரன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments