“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” : மதுக்கரையில் 19ம் தேதி கலெக்டர் தங்குகிறார்
The Forecast 7 months ago கோவை
தமிழக முதலமைச்சர் 23.11.2023 அன்று வெளியிட்ட செய்தியில், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து அங்கேயே கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இதனை முன்னிட்டு, வரும் 19,ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 20ம் தேதி காலை 9 மணி வரை மதுக்கரை வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல் நிலை துறை தலைமை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும் அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். மதுக்கரை வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கோயம்புத்தூர் தெற்கு மாநகராட்சி மண்டல அலுவலகம், மதுக்கரை வட்டத்திற்கான பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமைப் அலுவலர்களால் வரும் 19ம் தேதி அன்று காலை 11 முதல் 12 மணி வரை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. மற்றும் பிற்பகல் மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு அளித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் மதுக்கரை நகராட்சி 1 முதல் 27 வார்டுகள் முழுவதும், மாநகராட்சி (தெற்கு) மண்டலம் வார்டு 85 மற்றும் 94 முதல் 100 வார்டுகள் வரை, 6 பேரூராட்சிகள், 9 கிராம பஞ்சாயத்துகள் என மதுக்கரை வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற உள்ளது. இப்பகுதிகளில் உள்ள. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசின் அனைத்து திட்டத்தின்கீழ் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
0 Comments