பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் திறந்து வைத்தார்
The Forecast 1 month ago தமிழ்நாடு
தமிழக வெற்றிக் கழகம் 2-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தவெகவின் கொள்கை தலைவர்களான வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
வாகை மலரின் பின்னணியில் 3 அடி பீடம், ஒன்றரை அடி உயரத்தில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலையின் பீடத்திலும் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அந்தந்த தலைவர்கள் வாழ்ந்த காலக்கட்டங்களில், அவர்கள் நாட்டுக்காகவும், தமிழ் சமூகத்துக்காகவும் செய்த போராட்டம், தியாகங்கள், அவர்களின் இலக்கு என்ன என்பது இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நவீன வசதிகளுடன் கூடிய சக்கர நாற்காலியை விஜய் வழங்கினார். தொடர்ந்து, 5-ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் விருந்து வழங்கப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
0 Comments