அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாதிரி பள்ளிகளாக மாற்ற 16.26 கோடி செலவு ஒதுக்கீடு
The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
"வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபட்ட கற்பிக்கும் திறன் ஆகிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்- ஈஞ்சம்பாக்கம், திருச்சி மாவட்டம் - காட்டூர், திருவாரூர் மாவட்டம் -திருவாரூர், ஆகிய இடங்களில் இயங்கும் மூன்று ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம்- பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம்- குஞ்சப்பனை, சேலம் மாவட்டம்- வெள்ளிக் கவுண்டனூர் ஆகிய இடங்களில் இயங்கும், மூன்று பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள், ஆங்கில மொழிப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், அறிவுத்திறன் வகுப்பறைகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆகிய சிறப்பம்சங்களுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாக ஒரு பள்ளிக்கு தலா ரூ.2.71 கோடி வீதம் மொத்தம் 16.26 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்".
மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, (1) திருநெல்வேலி மாவட்டம், கடம்பன்குளம் (2) செங்கல்பட்டு மாவட்டம், நாகல்கேணி (3) காஞ்சிபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் (1) கள்ளக்குறிச்சி மாவட்டம், இன்னாடு, (2) நீலகிரி மாவட்டம், குஞ்சப்பணை, (3) சேலம் மாவட்டம், வெள்ளிக் கவுண்டனூர் ஆகிய அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு ரூ.14,82,13,480/- (ரூபாய் பதினான்கு கோடியே எண்பத்தி இரண்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்று எண்பது மட்டும்) மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண். 101, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள்.03.11.2022-இல் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி அரசாணையின் மூலம் 2203 மாணவ / மாணவியர்கள் பயனடைகின்றனர். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.
0 Comments