இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு 10 நாள் கெடு - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
The Forecast 3 years ago அதிமுக
அதிமுகவில் திருத்தப்பட்ட புதிய சட்டவிதிகளை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டு வருவது உள்ளிட்ட பொதுக்குழுவில் புதிதாக
திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புருசந்திர குமார் கவுரவ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவும் போட்டியிடவுள்ளதால், கட்சியின் விதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே கர்நாடகா
தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வழங்க வேண்டும், என்றார்.
அதற்கு இபிஎஸ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதே பதிலைத்தான் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூலை முதல் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக் கூடாது, என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து நாங்கள் தொடர்ந்துள்ள பிரதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. தங்களது தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே
இந்த வழக்கை இப்போதைக்கு விசாரிக்கக் கூடாது, என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கோரிய 10 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே இந்த 10 நாட்களில் தகுந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளார்.
0 Comments