பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தை 3-வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின்
தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
குறைந்தபட்சம் 226 கி.மீ. தூரமும், அதிகப்பட்சம் 41,603 கி.மீ. தொலைவும் கொண்ட புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நேற்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் மூன்றாவது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை நாளை மறுநாள் பிற்பகல் 2 முதல் 3 மணிக்குள் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலம் ஆக.23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments