பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வேண்டுகோள் விடுத்துள்ளது. - உள்நாட்டில் சீரான அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும், அதன் விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த 20-ஆம் தேதி தடை விதித்தது. இந்தியா ஏற்றுமதி செய்யும் மொத்த அரிசி அளவில் பாசுமதி அல்லாத ரகங்கள் சுமார் 25 சதவீதம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. முக்கியமாக, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உணவுப் பொருள்கள் விநியோக சங்கிலி ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசி ஏற்றுமதி தடையானது பல்வேறு நாடுகளில் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் பியரி ஒலிவியர் கோரின்சாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதுபோன்ற ஏற்றுமதி தடை உத்தரவுகள், சர்வதேச அளவில் உணவு தானியங்களின் விலையை மேலும் அதிகரிக்கும். மற்ற நாடுகளும் பதிலுக்கு ஏற்றுமதி தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற தடைகளை ரத்து செய்ய ஐஎம்எஃப் வேண்டுகோள் விடுக்கும்' என்றார். இந்தியாவின் இந்த முடிவு, உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் எனத் தெரிவித்துள்ள ஐஎம்எஃப் ஆராய்ச்சித் துறை உறுப்பினர் டேனியல் லே, அந்த முடிவால் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார். அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments