Loading . . .




செயல்படாத நல வாரியங்கள்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

The Forecast 2 years ago பாஜக

தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாட்டை கண்டித்து, தமிழக பா.ஜ., அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், தமிழக பா.ஜ., துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், கரு.நாகராஜன் பேசியதாவது:

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதுவரை இல்லாத வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீட்டு திட்டம், நடைபாதை வணிகர்களுக்கு கடனுதவி திட்டம், சிறு தொழில் செய்வோருக்கு, 1 லட்சம் கடனுதவி திட்டம் என, பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அங்கன்வாடி பணியாளர், ஆசிரியர்கள், நர்ஸ்கள், மக்கள் நல பணியாளர் என, பலரும் போராடி வருகின்றனர்.

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தையும், தமிழக அரசு செயல்படுத்தவில்லை. நல வாரியங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, முறையாக செலவிடப்படுவதில்லை; அதில், ஊழல் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.

மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம நல பணியாளர்களை அரசு ஊழியர்களாக நியமிப்பதுடன், 60 அமைப்பு சாரா ஊழியர்களுக்கு, 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments

Post your comment here

பாஜக Relateted News