கூட்டணி கட்சிகளை இழுப்பதில் போட்டா போட்டி அதிமுகவை உடைக்க அண்ணாமலை திட்டம்: டெல்லி அனுமதிக்காக காத்திருக்கிறார்
The Forecast 2 years ago பாஜக
என்டிஏ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகியதால், அதிமுகவை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார். இதற்கான திட்டத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலிட உத்தரவுக்காக அண்ணாமலை காத்திருக்கிறார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு அதிமுகவின் பெரும் தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பாஜ மேலிடம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், இதுவரை அதிமுக பல மடங்காக உடைந்தபோது, ஒவ்வொரு அணியினரும் பாஜ தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை கூறி வந்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் போட்டிப்ேபாட்டு மோடி, அமித்ஷாவை சந்தித்தனர்.
இதனால் அவர்கள் எப்போதும் நம்மை அனுசரித்துதான் நடப்பார்கள். மேலும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் துறையில் ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், நம்மை மீறி செல்ல மாட்டார்கள் என்று மேலிடம் கருதியது. அதிமுக தலைவர்களை பாஜவின் ஒரு பிரிவினரைப் போலத்தான் கருதி செயல்பட்டு வந்தனர். நம்மை மீறி எங்கு சென்று விடப்போகின்றனர் என்று நினைத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு பாஜ தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஊக்கம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தோஷ் கொடுத்த தைரியத்தில், அதிமுகவை உண்டு இல்லை என்று பண்ண ஆரம்பித்தார் அண்ணாமலை. எல்லோரையும் கிண்டல், கேலி செய்ய தொடங்கினார். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றார். இதனால், புழுவை மிதித்தாலும் அது கடிக்கும் என்பதைப் போல தங்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால் பாஜ மேலிட நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தப் பூனையா பால் குடித்தது என்பதுபோல அதிர்ச்சியில் இருந்து விலகாதவர்களாக பாஜ தலைவர்கள் உள்ளனர்
0 Comments