மின் வாகனங்களின் மின்கல மேலாண்மை செயலிகளாக பயன்படுத்தப்பட்டு வந்த ஏழு செயலிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீக்க உத்தரவிடப்பட்ட செயலிகளில் பேட்–பி.எம்.எஸ்., சுமார்ட் பி.எம்.எஸ்., லாசிகி உள்ளிட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளன. இந்த செயலிகளில் உள்ள நீல்பல் இணைப்பு பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி, மின்கல மேலாண்மை அமைப்புக்குள் அனுமதியின்றி நுழைய முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மூலம் இணையக் குற்றவாளிகள், இயக்கத்தில் இருக்கும் மின் வாகனங்களையே தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகள் முழுமையாக சரிசெய்யப்படும் வரை இந்த செயலிகளை செயலி அங்காடிகளில் இருந்து நீக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மென்பொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
0 Comments