Loading . . .




பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு இணங்க, இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், “பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை இது மேலும் வலுப்படுத்தும். இந்த அதிகரிப்பு தொழில்முனைவோருக்கு அவர்களின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும். இந்த நடவடிக்கை வலுவான தொழில்முனைவோர் சூழல் அமைப்பை வளர்ப்பதில் அரசின் கடமையை உறுதி செய்கிறது.

புதிய வகை தருண் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ .10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் பெற முடியும். ஏற்கனவே தருண் வகையின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு ரூ. 20 லட்சம் வரை கடன் கிடைக்கும். பிரதமரின் முத்ரா திட்டத்தின் கடன்களுக்கான உத்தரவாதக் காப்பீடு நுண் அலகுகளுக்கான கடன் உத்தரவாத நிதியின் கீழ் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்ரா திட்டம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கும் ஷிஷூ, ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கும் கிஷோர், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் தருண் ஆகிய வகைகளைக் கொண்டது. இதில், தற்போது தருண் பிளஸ் என்ற பெயரில் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News