Loading . . .




நான்கு நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்.

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

நாட்டின் பணப் புழக்கத்தை நிர்வகிக்க சோதனை அடிப்படையில் இன்று 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான ‘சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி’ சார்பில், நாட்டின் பணப் புழக்கத்தை நிர்வகிக்க வசதியாக டிஜிட்டல் கரன்சியை வெளியிட திட்டமிட்டது. டிஜிட்டல் நாணயமான ‘இ-ரூபாய்’ இரண்டு வடிவங்களில் இருக்கும். முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும்  இருக்கும். டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது.


அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார். கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள், இதன்மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்கள் உறவினர்களுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிப்பவர்களுக்கோ பணத்தை அனுப்பலாம். தற்போது நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.


மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. விரைவில் ஐரோப்பிய ஒன்றியம்  அதன் 27 உறுப்பு நாடுகளில் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் தொடர்ச்சியாக ‘டிஜிட்டல் கரன்சி’ முறையை சோதனை அடிப்படையில் ரிசர்வ் வங்கி இன்று அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி ஆகிய நான்கு வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகின்றன. பின்னர் பாங் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎப்சி மற்றும் கோட்டக் மகிந்திரா வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிட அனுமதிக்கப்படும்.


முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அகமதாபாத், கேங்டாக், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா ஆகிய நகரங்களில் வெளியிடப்படும். ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியானது, மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக, மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் கரன்சியாக இருக்கும் என்றும், டிஜிட்டல் கரன்சி காகித நாணயத்தை போன்றது என்றும், சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குறியீடுகள் மாற்றம்

இந்திய ரூபாய்க்கு ‘₹’ என்ற குறியீடு உள்ளது போன்று, டிஜிட்டல் கரன்சிக்கு ‘e₹’ என்ற குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த விலை விற்பனை சந்தையில் ‘e₹-W’ என்ற குறியீடுடன் ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயும், சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய்க்கு ‘e₹-R’ என்ற குறியீடும் உருவாக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News