Loading . . .




தீபாங்கர் தத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம்: மத்திய அரசு உத்தரவு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது. இன்று பொறுப்பேற்பு தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக பெங்களூரு வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, மூத்த வக்கீலும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்க தலைவருமான விகாஸ் சிங், நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு 5 வாரங்கள் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது என சுட்டிக்காட்டினார். இதுபோன்ற தாமதத்தை புரிந்துகொள்ளவோ, ஆமோதிக்கவோ முடியவில்லை என நீதிபதி எஸ்.கே.கவுல் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News