Loading . . .




அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்து கேள்வி கேட்க வேண்டும்: அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி கேட்க வேண்டும். எப்போதும் தேச நலனுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் 16வது குடிமை பணிகள் தினத்தையொட்டி, அரசு அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு ஊழியர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை. உலக அளவில் இந்தியாவுக்கான நேரம் இப்போது வந்து விட்டதாக சர்வதேச அமைப்புகளும், நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே இந்த சூழலில், அரசு அதிகாரிகள் ஒரு நொடியைக் கூட வீணாக்கக் கூடாது. மாநில அரசு ஊழியராக இருந்தாலும் ஒன்றிய அரசு ஊழியராக இருந்தாலும் தங்கள் பணியின் மூலம் அந்த நம்பிக்கையை நிலைநாட்டும்படி இருக்க வேண்டுமென ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.ஜனநாயகத்தில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அவைகளுக்கென தனித்தனி சித்தாந்தங்கள் உள்ளன. இது அரசியலமைப்பு வழங்கிய உரிமை. ஆனால் ஆளுங்கட்சிகள் அரசு நிர்வாகத்தில் முடிவுகளை எடுப்பதற்கு முன் அதில் சில கேள்விகளை அதிகாரிகள் கேட்க வேண்டும். வரி செலுத்துவோரின் பணம் ஆட்சியில் இருக்கும் கட்சியின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா? அரசு கருவூலத்தை ஆளுங்கட்சி தனது வாக்கு வங்கியை வளர்க்க பயன்படுத்துகிறதா அல்லது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறதா? அரசின் பணம் ஆளுங்கட்சியின் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா அல்லது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறதா? என கேள்வி கேட்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு முடிவும் தேச நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News