மத்திய அரசின் அவசரச் சட்டம்: தில்லி அரசுக்கு ஆதரவு மு.க.ஸ்டாலின்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரத்தில், தில்லி அரசுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவளிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வருகிறார். அதன்படி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தில்லி முதல்வர் கேஜரிவால் ஒரு நல்ல நண்பராக என்னுடன் பழகக் கூடியவர். தில்லி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில், தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆட்சியை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும், துணைநிலை ஆளுநர் மூலமாகவும் தில்லி அரசுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
திமுக கடுமையாக எதிர்க்கும்: தில்லி அரசின் செயல்பாடு தொடர்பாக, மாநிலத்துக்கு சாதகமான வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அது நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்தச் சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இதுகுறித்து, மற்ற மாநிலங்களில் இருக்கக் கூடிய முதல்வர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், தேசிய அளவிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் தில்லி அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தர வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு இல்லை: ஜூன் 12-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நான் (மு.க.ஸ்டாலின்) பங்கேற்க முடியாத நிலை உள்ளது. தேதியை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளோம். கேஜரிவால் உடனான சந்திப்பின்போதும் அந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். கட்டாயமாக தேதி மாற்றப்படும் என்ற உறுதியை அவரும் தந்துள்ளார்.
ஜனநாயகத்தை காப்பதற்கு கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
0 Comments