பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை!
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இவ்விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கும் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது. அப்போது நடந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை அமித் ஷா அங்கு முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மாநில அரசு பரிந்துரை செய்துளது. இன்னமும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்; மனதின் குரல் நிகழ்ச்சியில் 100 எபிசோடுகள் பேச முடிந்த பிரதமர் மோடியால், மணிப்பூர் வன்முறை குறித்து ஏன் இதுவரை பேச முடியவில்லை?அமித்ஷா மணிப்பூர் சென்று வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் தொடர்ந்து அந்த மாநிலம் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படாத நிலை இருக்கிறது. பிரதமர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும். மணிப்பூர் சென்று இயல்பு நிலையை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைத்து நம்பிக்கை தரும் செய்தியை வழங்க வேண்டும். மணிப்பூருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப வேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments