மணிப்பூர் காமன்லோக் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்றிரவு மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தர்கள் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்முறை சம்பவங்கள் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் ஜூன் 15 வரை இணையத்தை முடக்கியுள்ளது.
நான்கு நாள் பயணமாக கடந்த மே 29ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு வந்திருந்த நிலையில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை அறிவித்தார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்க்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 80 பேர் வரை உயிரிழந்தனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறையாளர்கள் தொடர்ந்த மோதலில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments