உச்சநீதிமன்றத்தில் ராகுலுக்கு நீதி கிடைக்கும்; எதிர்க்கட்சிகள் குரல்வளையை நசுக்குகிறது ஒன்றிய பாஜ அரசு: வைகோ குற்றச்சாட்டு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
அவனியாபுரம்: எதிர்க்கட்சிகளின் குரல்வளையை ஒன்றிய பாஜ அரசு நசுக்குவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்திக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்திருப்பது என்பது, மோடி அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒடுக்க வேண்டும், அவர்களின் குரல்வளையை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.நீரவ் மோடி போன்றவர்கள், பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டில் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தான் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இது ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து கூறுவதே தவிர, மோடி என்ற சமூகம் குறித்து தெரிவிப்பதல்ல. ராகுல் காந்தியை அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்திற்கு இந்த தீர்ப்பு பயன்படும். இதில், நான் நீதிபதியை குறை சொல்லவில்லை.குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இருந்த அதே மோடி அரசுதான், தற்போது ஒன்றிய அரசாக இருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராகுல்காந்தி உச்ச நீதிமன்றம் செல்கிறார். அங்கு அவருக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments