Loading . . .




இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்: திமுக எம்.பி. வில்சன் பேச்சு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்



சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சவுகார்பேட்டை அம்மன் கோயில் தெருவில் உள்ள ஜி.எம்.டி.டி.வி பள்ளி வளாகத்தில் 700 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தையல் தொகையுடன் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, திமுக சட்ட ஆலோசகர் பி.வில்சன் உள்பட கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். இதன்பின்னர் வில்சன் எம்பி பேசியதாவது; கலைஞர் குறித்து பேசுவதற்கு ஒருநாள் போதாது. அவரது திட்டங்களை நூற்றாண்டு முழுக்க பேசலாம். கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கான வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்சூரன்ஸ் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் திமுகவுக்கு செய்தி தொடர்பாளர் போன்றவர்கள். சென்னைக்கு வருபவர்களிடம் திமுகவின் சாதனைகள் குறித்து பேச வேண்டும். நமது முதலமைச்சர் குறித்து தான் பிரதமர் பேசுகிறார். பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் முதலமைச்சர் குறித்து தொடர்ந்து பேசுகின்றனர். தமிழகத்தின் சமூக நீதி, மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்கின்றனர். அனைத்து மாநிலங்களுக்கு நம் முதல்வர் வருவாரா என்று தான் கேட்கின்றனர். உத்தரபிரதேசம், டேராடூன், கேரளா ஆகிய மாநிலங்களில் நம் முதல்வரின் திட்டங்களை பாராட்டுகின்றனர். சமூக நீதிக்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று சொல்கின்றனர். மகளிர் உரிமைத் தொகையும் மகளிருக்கான இலவச பேருந்து பயணமும் மகளிர் மேம்பாட்டுக்கானது.31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டம் தமிழகம், இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பேசும் திட்டமாக உள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இதனையொட்டி ஒரு சிலர் நடைபயணம் செல்கின்றனர். சிலர் மாநாடு நடத்துகின்றனர். மாநாட்டில் எவ்வளவு உணவு வீணாகி உள்ளது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் செய்தி சேனல்களில் அதனை பார்த்தோம். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ராமுலு, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், ஷேக் அப்துல்லா, லோகேஷ், சம்பத்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம், சரஸ்வதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் துரைக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News