அதானியின் அரசு அல்ல காங்கிரஸ் அரசுகள் ஏழைகளின் அரசு: சட்டீஸ்கரில் ராகுல்காந்தி பேச்சு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
காங்கிரஸ் அரசுகள் ஏழைகளின் அரசுகளாக இருக்கும். அதானியின் அரசாக இருக்காது என்று சட்டீஸ்கரில் ராகுல்காந்தி தெரிவித்தார்.சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகெல் உள்ளார். அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டிப்பிரசாரம் மேற்கொண்டனர். நவ ராய்பூரில் உள்ள மேல ஸ்தாலில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:நாட்டில் உள்ள 2-3 கோடீஸ்வரர்களின் நலனுக்காக பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பாடுபடுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. வெறுப்பு மற்றும் வன்முறையால் நாடு முன்னேற முடியாது. அனைவரையும் அன்புடன் அழைத்து சென்றால்தான் முன்னேற முடியும். பழங்குடியின சமூகங்களை ‘ஆதிவாசி’ என்பதற்குப் பதிலாக ‘வனவாசி’ என்று பாஜ அழைக்கிறது. ஏனெனில் அவர்கள் காட்டில் இருந்து வெளியே வந்து பல்வேறு துறைகளில் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதை அது விரும்பவில்லை. பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகாரில் அதானிக்கு எதிரான விசாரணையை ஏன் விரும்பவில்லை என்பதை சட்டீஸ்கர் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி சொல்ல வேண்டும். ஏன் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.ஏனெனில் இதில் விசாரணை நடத்தினால் பாதிப்பு அதானிக்கு அல்ல, வேறு யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் விசாரணை நடத்தப்படவில்லை. கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் உள்ள எங்கள் அரசுகள் அல்லது தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எங்கள் கட்சியின் சார்பில் வரவிருக்கும் அரசுகள் எதுவாக இருந்தாலும், ஏழைகளின் அரசாக இருக்கும். அதானியின் அரசாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments