Loading . . .




அக்பரை புகழும் ஜி20 கையேடு; உண்மையான முகம் எது?: கபில் சிபல் கேள்வி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து இருப்பதால், இதன் 100வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போது பா.ஜ.க.வினர் பெருமையுடன் கொண்டாடினர். சமீபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு "பாரத்: ஜனநாயகத்தின் தாய்" எனும் ஒரு சிறு கையேடு வினியோகிக்கப்பட்டது. இதன் 38-வது பக்கத்தில் மொகலாய பேரரசர் அக்பர் குறித்து பிரசுரமாகியுள்ளது. அதில், "காலங்காலமாக இந்தியாவில் மக்களின் உணர்வு, ஆட்சி அமைப்பவர்களுக்கு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மொகலாய பேரரசர் அக்பர் ஆட்சியின் போது மதங்களை பற்றி எண்ணாமல் பொது நலனுக்காக அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது. தீன்-இ-லாஹி எனும் ஒருங்கிணைந்த மத கோட்பாட்டை அக்பர் உருவாக்கினார். தனது காலத்தையும் தாண்டி எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தவர் அக்பர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் துணையுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரதமரின் "மன் கி பாத்" நிகழ்ச்சியை இந்த கையேட்டுடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க.வை கிண்டல் செய்யும்விதமாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், "ஜி20 பதிவேடு: முகலாய பேரரசர் அக்பரை அமைதி மற்றும் ஜனநாயகத்தின் முன்னோடியாக புகழ்கிறது. உலகத்திற்கு ஒரு முகம்; பாரத் எனும் இந்தியாவிற்கு மற்றொரு முகம். உண்மையான இதயத்தின் குரல் எது என தெரிவியுங்கள்," என்று பதிவிட்டிருக்கிறார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News