வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களை கடைக்கு வந்து கைரேகை வைக்க சொல்வதா? ஒன்றிய அரசின் மறைமுக உத்தரவால் மக்கள் குழப்பம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச்சொல்லி ஒன்றிய அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களில் பொது விநியோகமும் ஒன்று. மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற கட்டுப்பாட்டு பொருட்களை விநியோகிக்க தமிழகத்தில் 3,300 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமாக வறுமைகோட்டிற்கு கீழான குடும்ப அட்டைகளான பிஎச்எச் மற்றும் ஏஏஒய் (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்) அட்டைகள் உள்ளது. அரிசி மற்றும் சர்க்கரை பெறும் என்பிஎச்எச் அட்டைகள் தமிழகத்தில் 90,08,842 உள்ளன. என்பிஎச்எச்-எஸ் குறியீடு உள்ள குடும்ப அட்டைகள் 10,01,605 உள்ளன. இவர்கள் அரிசி தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் வாங்கலாம். பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது.
இதனால் பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டையில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் அது பெரியவர், சிறியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வந்து, தனது கைவிரல் ரேகையை (பயோமெட்ரிக்) மிஷினில் வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று தற்போது ஒன்றிய அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் தமிழ்நாடு அரசு இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. உதவி ஆணையர் பெயரில் ரேஷன் கடைகளில் இதுபோன்ற அறிவிப்பு ஒட்டச் செய்துள்ளனர்.
0 Comments