Loading . . .




இஸ்ரேல் பாலஸ்தீன போர் எதிரொலி: இந்திய பங்கு சந்தை சரிவு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கடந்த சனிக்கிழமை காலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் நீர் வழியாகவும் பல வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தள்ளதாக கூறி இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை இரு தரப்பிலும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போரின் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் இன்று எதிரொலித்தது.

திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 500 புள்ளிகள் வரை சரிந்து 65,434 எனும் அளவை எட்டியது. பிறகு சற்று மேலெழுந்து 65,769 அளவை எட்டியுள்ளது.

தற்போது 65,576 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty) 142 புள்ளிகள் சரிந்து 19,510 எனும் அளவை எட்டியது. தற்போது 19,529 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா மற்றும் கனடா உட்பட பல நாடுகள் இருந்து வருகின்ற நிலையில், ஈரான், கத்தார் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக 2020 மற்றும் 2021 வருடங்களில் சரிந்திருந்த உலக பொருளாதாரம் பிறகு மெல்ல மீண்டு எழ ஆரம்பித்த நிலையில் ரஷிய உக்ரைன் போரினால் மீண்டும் சற்று நலிவடைய ஆரம்பித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பல நாடுகளும் பங்கு பெற ஆரம்பித்தால் உலக பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News