மணிப்பூர் தலைமை நீதிபதி முரளிதரன் கொல்கத்தாவுக்கு மாற்றம்: கொலிஜியம் பரிந்துரை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க பரிசீலிக்கும்படி அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எம்.வி. முரளிதரன் மாநில அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்தே, அங்கு பழங்குடியினரான குக்கி மற்றும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்ய தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையில் கடந்த 9ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீதிபதி முரளீதரன் தன்னை கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யாமல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் அல்லது தான் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். நீதிபதி முரளிதரனின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய கொலிஜியம், அதை நிராகரித்து விட்டது.
* 18 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
உச்ச நீதிமன்ற கொலிஜிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் 13 நீதிபதிகள் மற்றும் 5 வழக்கறிஞர்களை நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 13 நீதிபதிகள் டெல்லி, கேரளா, மும்பை, திரிபுரா மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களிலும் 5 வழக்கறிஞர்களில் ஒருவர் சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்திலும், மற்ற 4 வழக்கறிஞர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
0 Comments