தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago சென்னை
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் பொருட்டு, சென்னையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, உயர்மட்ட நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு மேற்கொண்டார்.
தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு உட்பட ஏழு முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் 3.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கம் பணி திட்டமிடப்பட்டு, ரூ.621 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த உயர்மட்ட சாலை மேம்பாலப் பணிகள் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை இல்லாத இடத்தில், 655 மீட்டர் நீளத்திற்கு, 22 தூண்கள் அமைக்கப்படவுள்ளது. இவ்விடத்தின் நிலத்தூண் அடித்தளம் (Pile Foundation) பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை உள்ள இடத்தில் 1955 மீட்டர் நீளத்திற்கு, 69 தூண்கள் அமைக்கப்படவுள்ளது. பாலத்தின் அழுத்த திறன், சுரங்கப்பாதை மேல்அடுக்கில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் “மைக்ரோ பைல்“ என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது “ஜீயோ சிந்தெட்டிக்“ என்ற முறையில் மண்ணின் தாங்குத் திறன் அதிகரிக்கும் வகையில், “ஜீயோ செல், ஜீயோ டெக்ட்டில்ஸ் மற்றும் ஜீயோ கிரிட்“ போன்ற ஏழு அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளது. மண்ணின் தாங்குத் திறனை சோதனை செய்ய 26.03.2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
- 460 மீட்டர் நீளத்திற்கு தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களில், 41 போர்டல் ப்ரேம் (Portal Frame) அமைக்கப்பட்டு, உயர்மட்டப் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று கட்டப் பணிகளும், தனித்தனியாக பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, திட்டமிட்ட இலக்கின்படி பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரருக்கும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் முனைவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு (தொழில்நுட்பம்) அதிகாரி இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் எம்.செல்வகுமார், கோட்டப்பொறியாளர் சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 Comments