திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
வரும் 28ஆம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதலே அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், "கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு 19.10.2022 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி சென்னை பெருநகர காவல் துறையால் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, கணினி சேவையகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால். சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை இன்று (26.10.2022) முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் புதிய விதிமுறைகளின்படி அமல்படுத்தப்படும் என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments