கோடை வெயில் காரணமாக
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைப்பது குறித்து
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசித்து முடிவு செய்வார் என துறை சார் உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்காக அரசு, தனியார் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.இது குறித்த விவரங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை அமைச்சர் விரைவில் மேற்கொள்வார் என்றனர்.
0 Comments