Loading . . .




ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவகம் - சுய உதவிக் குழுக்களுக்கு தருமபுரி கலெக்டர் அழைப்பு

The Forecast 2 years ago தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

சிறுதானியங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன. 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட முடிவு செய்துள்ளது.

தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க சுய உதவிக் குழுக்கள் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்கள் என்ஆர்எல்எம் போர்ட்டலில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

கூட்டமைப்பு எனில் தர மதிப்பீடு செய்யப்பட்டு சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுக்கள் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். உணவகம் தொடங்குவோர் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம். கூடுதல் விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள், ஜூலை 21-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

0 Comments

Post your comment here

தருமபுரி Relateted News