காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக காங்., மீது ஏற்கனவே பல புகார்கள் வந்தபடி உள்ளன.
'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பற்றித் தான் அதிக செய்திகள் வெளிவருகின்றன. அடிக்கடி ஊர்வலம், போராட்டம் என, அண்ணாமலை நடத்துகிறார்.
'இன்னொரு பக்கம் அண்ணாமலையின், 'என் மண், என் மக்கள்' என்கிற பாத யாத்திரைக்கு அதிக விளம்பரம் தரப்படுகிறது; மக்களும் அதிக அளவில் அவரது யாத்திரையில் கலந்து கொள்கின்றனர்.
இப்படி அண்ணாமலை பற்றி தினமும் செய்திகள் வருகின்றன. அ.தி.மு.க.,வை தள்ளிவிட்டு, எதிர்க்கட்சி தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார். ஆனால், தமிழக காங்கிரஸ் பரிதாபமான நிலையில் உள்ளதே' என, கோபப்பட்டாராம் கார்கே.
மேலும், 'தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், வெறுமனே எந்த ஒரு கூட்டமோ, மக்களுடன் சந்திப்போ இல்லாமல், கட்சி வேலையில்லாமல் இருக்கிறதே...' என்கிறாராம் கார்கே. அதுமட்டுமல்லாது, 'விரைவில் தமிழகத்தில் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு பேரணியோ நடத்த வேண்டும்...' என, சொல்லி இருக்கிறாராம்.
'அழகிரிக்கு பதிலாக, பரபரப்பாக செயல்படக்கூடிய ஒரு தலைவரை, மாநிலத் தலைவராக கார்கே நியமிக்க வாய்ப்புள்ளது; அந்த தலைவர், ஒரு பெண்மணியாக கூட இருக்கலாம்' என, கிசுகிசுக்கின்றனர் டில்லி காங்கிரஸ் தலைவர்கள்.
0 Comments