ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை... மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்
The Forecast 3 years ago ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. மூடி முத்திரையிடப்பட்ட காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வி.வி.பேட் கருவிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. காப்பு மையத்தின் உள்ளே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
0 Comments