இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து மே.9 வரை அமல்படுத்தக் கூடாது: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
The Forecast 3 years ago கேரளா
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த முடிவை மே ஒன்பதாம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு கடந்த மார்ச் 24ம் தேதி மாற்றி அமைத்தது. இந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கான 10சதவீத இட ஒதுக்கீடு முறையில் இணைக்கப்படுவதாகவும் கர்நாடகா அரசு அறிவித்தது.இந்த நிலையில் மேற்கண்ட கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் நாகரத்னா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட முடிவை செயல்படுத்த மாட்டோம் என கர்நாடகா அரசு தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் மே 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அதுவரை இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கர்நாடகா அரசு அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.
0 Comments