Loading . . .




உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள்: மல்லிகார்ஜூன கார்கே உருக்கம்

The Forecast 2 years ago காங்கிரஸ்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது சொந்த ஊரான கலபுரகியில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- நான் உள்பட எனது குடும்பத்தினரை கொலை செய்வதாக பா.ஜனதா வேட்பாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் பா.ஜனதா தலைவர்களின் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு யாருக்கு கார்கே குடும்பத்தை அழிக்க இத்தகைய தைரியம் வரும். அவரது மிரட்டலுக்கு பின்னணியில் சில பா.ஜனதா தலைவர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மிரட்டல் வந்திருக்காது.


என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுரகி மற்றும் கர்நாடக மக்கள் உள்ளனர். நான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் அழித்தால், எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். நானும், எனது மகனும் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக பேசுவதால், எங்களை ஒழிக்க திட்டமிடுகிறார்கள். பிரதமர் மோடியும் அதே போல் தான் நடந்து கொள்கிறார். என்னை பற்றி நீங்கள் (மோடி) பேசுங்கள், அது சரி. ஆனால் எனது மகனை பற்றி பேசுவது ஏன்?. எனது மகன் உங்களுக்கு (மோடி) சமமானவர் இல்லை. நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள்?. நான் சிறுவயதாக இருந்தபோது, ஒட்டுமொத்தமாக எனது குடும்பத்தினரை இழந்து தனியாக நின்றேன்.


நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் நாங்கள் தொடர்ந்து வாழ்வோம். பா.ஜனதாவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும், நானும் வலுவாக தான் உள்ளேன். எனக்கு தற்போது 81 வயது ஆகிறது. நான் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு என்னை நீங்கள் கொலை செய்ய விரும்பினால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள். நான் அதற்கு தயாராக உள்ளேன். ஆனால் எனது உயிர் மூச்சு உள்ளவரை ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News