வழக்குகளில் விதிக்கப்படும் அபராத தொகையை செலுத்த கலைஞர் நூலகம் பெயரில் வங்கி கணக்கு: ஐகோர்ட் உத்தரவு
The Forecast 2 years ago மதுரை
வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சேர்ந்த மாரியப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “வீரசிகாமணி கிராமத்தில் உள்ள பரோட்டா கடை மற்றும் கட்டிடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். அதனை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக நான் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு, “மனுதாரர் பரோட்டா கடை வைத்து உள்ளார். அவர் பொது இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளார். இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை மறைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரரே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை மதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதற்காக உயர் நீதிமன்ற பதிவாளர் கலைஞர் நூலகம் பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
0 Comments