ராகுல் காந்தி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை அதிகரித்து விட்டதால், அதற்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து அதானி நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
டில்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: இந்தோனேஷியாவில் அதானி நிறுவனம் நிலக்கரி வாங்கியது. அது இந்தியா வருவதற்குள் விலை இரு மடங்காகிவிட்டது. அதற்காக அவர் ஏழை மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கிறார். இது நேரடி திருட்டு ஆகும். மக்களின் பைகளில் இருந்து ரூ.12 ஆயிரம் கோடி பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அதானியை அரசு பாதுகாக்கிறது. அவருக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதானி, நிலக்கரி இறக்குமதி செய்ததில், ஏற்பட்ட பணவீக்கத்தால், சாமானிய மக்களின் மின்சாரச் செலவு அதிகரித்து வருகிறது. அதானி நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த அரசு எடுக்க தயங்குவது ஏன்?
பிரதமர் மவுனமாக இருப்பதினால் தான் அவரிடம் கேள்வி எழுப்புகிறேன். நான் பிரதமருக்கு உதவி மட்டும் செய்கிறேன். விசாரணையைத் தொடங்கி, அவரது நம்பகத்தன்மையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொது மக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுகிறது. மின்சாரத்திற்காக சுவிட்ச் பட்டனை அழுத்தும் போது எல்லாம் அதானி பைகளில் பணம் சென்று சேர்கிறது. மற்ற நாடுகளில் விசாரணை நடக்கிறது. மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், நிச்சயம் விசாரணை நடத்துவோம் என்றார்.
சரத்பவாரிடம் கேள்வி கேட்பேன்
அப்போது பத்திரிகையாளர்கள், அதானிக்கு எதிராக ‛இண்டியா' கூட்டணி தலைவர்கள் ஒன்றாக நிற்கும் நிலையில் அவரை சரத்பவார் சந்தித்தது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை என்ற கேள்விக்கு ராகுல் அளித்த பதில், சரத்பவார் , பிரதமர் பதவியில் இல்லை என்பதால் அவரிடம் நான் கேள்வி எழுப்பவில்லை.
அதானியை சரத்பவார் பாதுகாக்கவில்லை. பிரதமர் மோடி தான் பாதுகாக்கிறார். இதனால் தான் மோடியிடம் கேள்வி கேட்கிறேன். ஒருவேளை சரத்பவார், பிரதமர் பதவிக்கு வந்து அதானியை பாதுகாத்தால், இந்த கேள்வியை சரத்பவாரிடமும் கேட்பேன். இவ்வாறு ராகுல் கூறினார்.
0 Comments