ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 45 நாட்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு இருப்பதாக தெரிவித்தார். எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என நரேந்திரா மோடி தெரிவித்ததையடுத்து பொதுமக்களிடையே எழுந்த கவலைக்கு விளக்கமாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளவில் எண்ணெய் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையெனில் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, நாட்டில் எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும், தற்போதைய கையிருப்பு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளதாகவும் கூறினார்.
சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விநியோகத்தில் எந்த தடையும் இல்லாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் இந்த விளக்கம் பொதுமக்களின் அச்சத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
0 Comments