ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் தேவை இல்லை. ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பதில்
The Forecast 3 years ago உலக செய்திகள்
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா தலைவராக இருந்தது.
இந்த நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கு இந்தியா மீண்டும் தலைவராகி உள்ளது. அதை தொடர்ந்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்போஜ் கூறியதாவது,
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்துள்ளோம். அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலுவாக இருக்கின்றன.
அதுமட்டுமல்ல எங்கள் நாட்டில் சமூக வலைதளம் கூட சுதந்திரமாக இருக்கிறது. அதனால் இந்தியா தான் உலகிலேயே வலுவான ஜனநாயகம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நடத்துகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கின்றது. எங்கள் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார்
0 Comments