தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதல்வரின் பயணத்தை கொச்சைப்படுத்துவதா?இபிஎஸ்-க்கு கண்டனம்! தங்கம் தென்னரசு
The Forecast 2 years ago அரசியல் செய்திகள்
வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் என்றும் முதலீடு ஈட்டப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப்போகிறாரா? என்று கடுமையாக விமரிசித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு சென்றுள்ள
முதலமைச்சரின் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்க அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட வேண்டாம். அதிமுக பொதுச் செயலாளர் பதவியைப் பெற பெட்டி, பெட்டியாக பணம் அளித்தவர் இபிஎஸ். அவர் பாணியிலேயே நாங்களும் பேசினால் அவர் ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது.
அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் "ஊரெங்கும் ஊழல்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி. வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 Comments