ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து
The Forecast 2 years ago நீதித்துறை
ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்; ”சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் திருவிழா நடைபெறும். அந்த இடத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்நிலையில் அந்த காலியிடத்தில் சிலர் கட்டிடம் கட்டினர்.இது குறித்து புகார் அளித்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி 3 நாட்களுக்கு மட்டும் கட்டுமானப் பணியை நிறுத்தியவர்கள் தற்போது மீண்டும் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர். எனவே, கோயில் அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் வணிகக் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தது போது தென்காசி ஆட்சியர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், சிவகிரி வட்டாட்சியர் ஆகியோர் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; தென்காசி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர், அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
0 Comments