நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்துக்கு வழங்க வேண்டுமென நீதிபதிகளின் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது, மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இதனை விதித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர், 'தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தொடங்க வேண்டும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்' என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
'ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும்' என்று சொல்வார்கள். அந்த மூதுரையை, உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments