சென்னை மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள்-வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம்- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப.,
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மெட்ரோ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது:
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடித்திட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றிட வேண்டும். இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மழையின் காரணமாக எப்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து தொடர் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்வாய் மற்றும் சேவைத்துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இடங்களில் சாலைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,116 கோடி மதிப்பீட்டில் சுமார் 716 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1,481 கோடி மதிப்பீட்டில் சுமார் 380 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியால், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் புதிதாக மேற்கொள்ளப்படும் ரூ.232 கோடி மதிப்பீட்டிலான கால்வாய் பணிகளை முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் இரண்டு கட்டங்களாக 6,720 இடங்களில் 1360 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை பருவமழை காலத்திற்கு முன்பாக பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வாரியப் பணிகள் போன்ற சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீர்செய்ய வார்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றிட வேண்டும். மழையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் முழுமையான கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி தகுந்த தடுப்புகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று பேசும்போது தெரிவித்தார். பணி நடைபெறும் இடங்களில், அங்கு வசிப்பவர்களிடம் பணியின் விவரங்கள் தெரியப்படுத்துவதுடன் அது துவங்கும் நாள் மற்றும் முடியும் காலத்தை தெரிவிக்க வேண்டும். அனைத்து முன்னுரிமை பணிகளும் செப்டம்பர்-15க்குள் முடிக்கப்பட வேண்டும்.
மண்டலம் 14ல் மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் விரைந்து கொடுக்கப்பட வேண்டும். ஒப்வொரு வாரமும் இணைப்புகள் கொடுக்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதையில் செயல்படுத்தப்படவுள்ள வடிகாலை ஓட்டேரி கால்வாயுடன் இணைக்கும் மழைநீர் கால்வாய் பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் விரைந்து முடித்திடல் வேண்டும். கணேசபுரம் சுரங்கப் பாதையில் கூடுதலாக 300 மி.மீ. விட்டம் உள்ள குழாய்கள் மூலம் மழைநீர் வெளியேற்ற பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் பணி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து சுரங்கப்பாதைகளிலும் உள்ள மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள் தூர்வாரப்பட வேண்டும். அங்குள்ள மோட்டர் பம்புகள் நல்ல நிலையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதலாக மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திடல் வேண்டும்.
நெடுஞ்சாலை துறையின் மூலம் அசோக்நகர் மற்றும் எழும்பூர் காந்தி இர்வின் பாலம் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப்பணிகள் ஆகஸ்டு 2023-க்குள் முடிக்கப்பட வேண்டும்.
ரெட்டை ஏரியில் கூடுதலாக தடுப்புகள் (shutters) நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மடிப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் மேற்கொள்ளப்படும் சாலை வெட்டுபணிகள் ஜூலை -15க்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் /ஆணையர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் . பிரதீப் யாதவ் இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments