காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட வனச் சரகப் பகுதிகளில் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், கடையம் வனச் சரகம் சாா்பில் சிவசைலத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வனச் சரகா் கருணாமூா்த்தி தலைமை வகித்தாா்.
காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்குவதோடு, பிற மாவட்டங்களில் உள்ளதுபோல் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கவேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை 3 நாள்களுக்குள் வழங்க வேண்டும். கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட வன எல்லை முழுவதும் மின்வேலி அமைக்க வேண்டும். பட்டா விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க 100 சதவீத மானியம் வழங்க வேண்டும் அல்லது வனத் துறையே மின்வேலி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
இதுதொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உயரதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் என வனச் சரகா் தெரிவித்தாா். கூட்டத்தில், நீா்ப்பாசன கமிட்டி நிா்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினா், விவசாயிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
0 Comments