சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட சோழர் கால செப்பேடுகள் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு பிரதமர் நரேந்திரா மோடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் செப்பேடுகள் இந்தியாவின் முக்கிய கலாசார பாரம்பரிய ஆவணங்களாக கருதப்படுகின்றன.
ஆனைமங்கலம் செப்பேடுகள் என அழைக்கப்படும் இந்த தொகுப்பு, கி.பி. 985 முதல் 1012 வரையிலான ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 21 செப்பேடுகள் கொண்ட இந்த தொகுப்பில், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு ராஜராஜ சோழன் வழங்கிய நில தானம் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு டச்சு அதிகாரி ஒருவரால் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவை இந்தியாவுக்கு திரும்பியிருப்பது வரலாற்று மற்றும் கலாசார ரீதியாக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
சோழர் ஆட்சி நிர்வாகம், மத அமைப்புகள் மற்றும் நில தான நடைமுறைகள் குறித்து இந்த செப்பேடுகள் முக்கிய தகவல்களை வழங்குகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தை அறியவும் இந்த ஆவணங்கள் முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன.
இந்த வரலாற்றுச் செப்பேடுகள் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பியிருப்பது, இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments