செந்தில் பாலாஜி வந்துவிட்டாலே வெற்றி உறுதி.. அவர் எனக்கு இன்னொரு மகன்.." உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
The Forecast 3 years ago ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குகளைச் சேகரித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா
எதிர்பாராத விதமாகக் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம் கடந்த ஜன.31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்! காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல்! திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ்
கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் இந்தத் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கின. இதனிடையே
ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அதன்படி நேற்று மாலை இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குகளைச் சேகரித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும் என்றும் ஈரோடு கிழக்கில் எத்தனை வேட்பாளர்கள் உள்ளனர் என்பது கூட தெரியாமல் அதிமுக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்..தந்தை வழியில் மகன் செயல்பட்டு நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்..ஆனால், இங்கு மகன் வழியில் தந்தை செல்கிறேன். மகன் மறைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. மக்கள் தரும் அன்பும் பாசமும் அதில் இருந்து மீள உதவுகிறது. இப்போது எனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் செந்தில் பாலாஜி வந்துள்ளார். அவர் எனக்கு மற்றொரு மகன் என்றே கூடச் சொல்லலாம். தேர்தல் களத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வந்துவிட்டார். இனிமேல் எனது
வெற்றி உறுதிதான். இந்தத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் எனக்கு இருக்கும் உரிமையை வைத்து ஈரோடு மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்வேன்.
எப்போது நான் ஈரோடு மக்களின் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேனோ.. அப்போது தான் நான் எனது மகன்
நினைத்ததைச் செய்துள்ளேன் என்று பொருள்... இப்போது எங்கள் குடும்பத்தில் நான், எனது மனைவி, இளைய மகன் சஞ்சய் என்று மூன்று பேர் இருக்கிறோம். எங்களுக்கு இப்போது எதுவும் தேவையில்லை.. எனதுமுன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்தில் 90% நான் விற்றுவிட்டேன் என்பது உண்மைதான். இருப்பினும் மீதம் 10% இருக்கிறது. அதுவே எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கை நடத்த போதும்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
குறித்துக் கேட்கிறீர்கள். அண்ணாமலை எப்போதும் பொய் மட்டுமே சொல்லும்
ஒருவர்.. பொய் சொல்வதைத் தவிர அவர் வேறு என்ன செய்துள்ளார். அவர் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது.
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது..ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குச்செல்லவே அதிக நேரம் ஆகிறது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
0 Comments