மருத்துவர் பாலாஜியின் தாக்குதல் தொடர்பாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து மருத்துவர் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக தீர்வு எட்டப்பட்டது
The Forecast 1 year ago மக்கள் நல்வாழ்வுத்துறை
நேற்று காலை 10.30 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவனையில் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றது. பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறை மருத்துவர் பாலாஜி என்பவரை தாக்கி, அவர் மறைத்து கொண்டு வந்த சிறு கத்தியின் மூலம் 7 இடங்களில் பலத்த காயத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரை உடனடியாக பணியாற்றிய ஊழியர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். காவல்துறையினர் அவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து மருத்துவர் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் மரு. அருண் தம்புராஜ், இ.ஆ.ப.,மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments