2024-2025ஆம் ஆண்டிற்கு வங்கிகளின் மூலம் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தகவல்
The Forecast 1 year ago கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-2025 ஆம் வருடத்தில் ரூ.64,682 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ. 26,789 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.35,661 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2231 கோடி என ஆக மொத்தம் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,053 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
0 Comments