உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர். குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சேவ் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் (இ.ஆ.ப.) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்த வகையிலும் வேலைக்கு செல்லக் கூடாது என்பதையும் வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அரசு அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சிறு நாடகங்கள் மூலமும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தைகள் கல்வி கற்று பாதுகாப்பாக வளர வேண்டிய சூழலை உருவாக்கும் முயற்சியில் சமூகத்தின் பங்களிப்பு தொடர்ந்து அவசியமானதாக உள்ளது.
0 Comments