கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளம் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் பராமரித்தல் மற்றும் இயக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
The Forecast 1 year ago கோவை
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளம் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் பராமரித்தல் மற்றும் இயக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம். குமாரசாமி குளம். செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம். வாலாங்குளம் மற்றும் குறிச்சிகுளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதை பூங்காங்கள், படகு நிலையம், உணவகங்கள், சிறுவர் விளையாட்டு திடல், கலை நிகழ்ச்சிகள் மையம் ஆகியவை அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவற்றுள் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் திருவள்ளுவர் சிலை, ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம், கலை சிற்பங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு குளத்தின் கரையிலும் 2.5 கி.மீட்டர் முதல் 5 கி.மீட்டர் வரை நடைபாதை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குளங்களை சிறந்த முறையில் பராமரித்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மேற்கொள்ளும் வகையில், குளங்களை பராமரிப்பு மற்றும் இயக்குதல் (O&M) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் பூங்கா பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பராமரிப்பு, விசைப்படகு சவாரி, நீர் விளையாட்டு, சாகச விளையாட்டுக்கள் (Zip Line, Zip Cycling) உணவு கூடங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், பூங்கா, கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணி ஆகிய அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சிறிய எலக்ட்ரிக் ரோந்து வாகனம், சிறிய மொபைல் வாகனம், தண்ணீர் மூலமாக தரையை சுத்தம் செய்யும் இயந்திரம், நடைபாதை சுத்தம் செய்யும் வாகனம் உள்ளிட்ட இயந்திர வாகனங்களும் மற்றும் தோட்டக்கலை நிபுணர், பராமரிப்பாளர், கலை நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மேற்காணும் குளங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆகியோர் உக்கடம் பெரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்வில் உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சரவணன், ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கரன், தி/ள் லயன் சர்வீஸ் லிமிடெட் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments