சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்வதால் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
The Forecast 1 year ago சேலம்
தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்குப்பின் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.06.2025, 12.06.2025 ஆகிய 2 நாட்கள் சேலம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். குறிப்பாக 11.06.2025 புதன்கிழமை அன்று சென்னையில் இருந்து வருகை புரிந்து மேட்டூர் செல்ல உள்ளார்கள். மேட்டூர் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பினை அளிக்கவுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, 12.06.2025 வியாழக்கிழமை அன்று காலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர், சேலம் இரும்பாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 1 இலட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2 நாட்கள் சேலம் வருகையின்போது பொதுமக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளிக்க உள்ளார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நே.பொன்மணி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், காவல்துறை துணை ஆணையர் வேல்முருகன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப்பொறியாளர் தவமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments